பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்ற 14 ஆம் திகதி கொழும்பில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார்.
இதன்போது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகள், தமிழ் இளைஞர்கள் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவோ அல்லது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தானோ போரை வழி நடத்தவில்லை என்றும், மாறாக முன்னாள் இராணுவத் தளபதியே (அவர் யார் என்று பெயர் குறிப்பிடவில்லை) போரை வழிநடத்தியதாகவும் கூறி அந்த கேள்வியிலிருந்து நழுவிச் சென்றிருந்தார்.
ஆனால் பெலியத்தைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இறுதிப் போரைத் தானே வழிநடத்தியதாகக் கூறியுள்ளார். இருவரத்திற்குள் இவ்வாறு இரண்டு விதமான கருத்துக்களை கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.