யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்;ப்பாட்டத்தின் பின்னர் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன தமது பிள்ளைகள், கணவன்மார் தொடர்பாக இலங்கை அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் வடக்குக்- கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.
வெறுப்புப் பேச்சை எதிர்ப்போம் என்ற தொனிப் பொருளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் வாக்குறுதிகளை இனிமேல் நம்பமுடியாதெனக் கூறப்பட்டது. தமிழ் இளைஞர், யுவதிகள் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பங்குகொண்டனர். மறுக்கப்பட்ட நீதி கிடைக்க வேண்டுமெனவும் காணாமல் ஆக்கபட்டோர் பற்றி இலங்கை அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டுமெனவும் போராட்டத்தில் பங்குபற்றிய மக்கள் கோசம் எழுப்பினர்.