பதிப்பு: 2021 ஓகஸ்ட் 03 22:18
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு:
ஓகஸ்ட் 06 22:38
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவில் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்துகளை மீண்டும் உடனடியாக நிறுத்திக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாத்திரம் கொவிட் மற்றும் டெல்ரா தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டு 74 பேர் உயிரிழந்துள்ளனர். சென்ற முதலாம் திகதியில் இருந்து போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் நெருக்கமாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்வதை அவதானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது முடக்கம் இல்லாத நிலையில் மக்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மருத்துவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரட்ன தெரிவித்தார். இதுவரை 4 ஆயிரத்து 645 பேர் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.