குற்றவியலோடு தொடர்புடைய தற்கொலைத் தாக்குதல் என்பதால் இதனை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்த முடியாதெனவும் உயர் நீதிமன்றம் மாத்திரமே விசாரிக்க முடியுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இலங்கைத் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிசிர மென்டிஸ் இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்பாக வழங்கிய வாக்கு மூலத்தின்படி, ஜனாதிபதியும் பிரதமருமே குற்றவாளிகள் என்று மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் நான்காம் திகதி புலனாய்வுத் தகவல் கிடைத்தது. ஆனால் எட்டாம் திகதி தான் தனக்கு அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டதென்றும், அன்று மாலையே இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு அறிவித்ததாகவும் சிசிர மென்டிஸ் கூறியுள்ளார்.
(ஹேமசிறி பெர்ணான்டோ மைத்திரியின் வற்புறுத்தலினால் பதவி விலகியுள்ளார். பூஜித் ஜயசுந்தர மைத்திரியினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.)
ஆனால் ஏப்ரல் ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயத்தைக் கூறியபோது கவனம் செலுத்தப்படவில்லையெனவும் தனது வாக்குமூலத்தில் சிசிர மென்டிஸ் விபரித்துள்ளார்.
ஆகவே நேற்றுப் புதன்கிழமை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சிசிர மென்டிஸ் இவ்வாறு வாக்குமூலம் வழங்கி உண்மையை வெளிப்படுத்தியதால், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் இலங்கைப் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பானவர்களுமே இதற்குப் பதில் கூற வேண்டுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
தற்கொலைக் குண்டுதாரி ஸக்ரான் அவருடைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஆகியவை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பணிப்பாளருக்கு அறிக்கை ஒன்றை ஏலவே சமர்ப்பித்திருந்ததாக தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிசிர மென்டிஸ் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக் குழு முன்னிலையில் கூறியுள்ளார்.
எனவே இதனடிப்படையில் குற்றவாளிகள் யாரெனத் தெரிந்து விட்டதாகவும் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதாகவும் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்தும்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளைக் கைதுசெய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது. ஏனெனில் இலங்கை உயர் நீதிமன்றத்தை விட, இலங்கை நாடாளுமன்றமே மீயுயர் அதிகாரம் கொண்டது.
அத்துடன் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று மூன்றாம் நாளே விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை மைத்திரிபால சிறிசேன அமைத்துமுள்ளார்.
இந்த நிலையிலேயே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென கொழும்பில் உள்ள இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். வேறு சிலர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுமுள்ளனர்.
ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதால் இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியாது. இதனால் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
அத்தோடு நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்த முடியுமேதவிர, விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்குத் தண்டை வழங்கும் அதிகாரம் இல்லையெனவும், எனவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடத்தும் விசாரணை மக்களை ஏமாற்றும் செயற்பாடென்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கூறியதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சிசிர மென்டிஸ் வழங்கிய வாக்குமூலங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாகவே நிராகரித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் சபையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான புலனாய்வு அறிக்கை குறித்துப் பேசப்படவில்லையெனவும் மைத்தரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு இன்று வியாழக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.