கிளார்க் கூப்பரின் கொழும்பு வருகை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதுவுமே கூறவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கிளார்க் கூப்பரின் வருகை தொடர்பாக முக்கியத்தும் கொடுக்கவில்லை.
அத்துடன் கிளார்க் கூப்பரின் வருகை தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஆங்கில நாளேடுகள், செய்தி இணையத்தள ஊடகங்கள் எதுவுமே முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
நேற்றுத் திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டப் பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சுக்களில், கிளார்க் கூப்பருடன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், துணைத் தூதுவர் றொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழுத்தங்களினால் பதவி விலகிய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரையும் கிளார்க் கூப்பர் சந்திப்பாரென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுரையும் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகவில்லை. ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பாரென பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. ஆனாலும் கிளார்க் கூப்பரின் கொழும்பு வருகை தொடர்பாக ரணில் அரசாங்கம் ஊடகங்களுக்குக் கருத்துக் கூற விரும்பவில்லை. தடுமாற்றமடைவதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த வெளிநாட்டு இராணுவப் புலனாய்வாளர்கள் அவசியமில்லையெனவும் எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இலங்கைக்கு வருகைதரத் தேவையில்லையென்றும் கண்டி மகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.
வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்குள் வராதென்று மைத்திரிபால சிறிசேனவும் மகாநாயகத் தேரர்களிடம் உறுதியளித்துள்ளார். சென்ற சனிக்கிழமை பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்திருந்தார்.
சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை எதிர்க்காத மகாநாயக்க தேரர்கள், அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், கண்டிக்குச் சென்று இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இறைமைக்கும் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென விளக்கமளித்திருந்தார்.
ஆனாலும் மகாநாயகத் தேரர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். எனினும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் எதிர்ப்பு வெளியிடவில்லை.
ஆனாலும் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். தன்னுடைய அனுமதியின்றி அமொிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாமெனவும் உத்தரவிட்டுள்ளார்.