இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி இரண்டு நாட்கள் இடம்பெற்றது. இந்த மாநாட்டின் போது இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் கொடூரம் குறித்து இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இதன் செயற்பாட்டில் இந்தியா தனது செயற்பாட்டை உறுதிசெய்துள்ளது.
கல்வியும் கலாசாரமும் நமது சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செயற்பாடுகளைக் கொடுத்தது. இளைஞர்கள் இடையே பிரிவினையை பரப்புவதை நிறுத்த வேண்டும். இலங்கை சென்ற போது புனித அந்தோனியார் தேவாலயத்தில் பல அப்பாவிகளின் உயிர்களைப் பறித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தைப் பார்த்தேன்.
பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் கூட்டாக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நிதி ஊக்கமளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என நரேந்திர மோடி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.