அமெரிக்க இராணுவத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு அனுமதிக்க முடியாதெனவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்சவோ அல்லது அவருடைய சகோதரர், கோட்டாபய ராஜபக்சவோ இதுவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை.
ஆனால் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் கட்சியின் வேறு உறுப்பினர்களை அமெரிக்காவுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மகிந்த ராஜபக்ச என்று ஐக்கிய தேசியக் கட்சி ஏலவே குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவோடு உடன்படிக்கை ஒன்று மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் 2007 ஆம் ஆண்டு செய்யப்பட்டதாகவும் 2017 ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் காலவதியாகிவிட்டதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அந்த அடிப்படையிலேயே தற்போது அந்த புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்யவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
சோபா எனப்படும் ஒப்பந்தத்தின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க சென்ற நாடாளுமன்ற அமர்வில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.