இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லையானால் ஆணைக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை முதலில் நடத்தாமல், ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த முடியாதென்றும், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அது பாரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்துமெனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான கடமை. அப்படி இல்லையேல் தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவெனக் கூற முடியாதெனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய கடமையாற்றுக்கினார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடத்தப்படாமல், மாகாண சபைகள் முறையை அப்படியே கைவிடுவதென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் ஆலோசித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் ஜே.வி.பி போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடுவதாகவும், எனினும் மாகாண சபை முறையைக் கைவிடுவதால், ஏற்படவுள்ள நன்மைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இணைந்த வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபை முறை ஊடாக நிறுவுவதற்கு தமிழ்க் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அத்துடன், ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களை முழுமையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதால், மாகாண சபைகள் முறையை கைவிட வேண்டுமெனவும் அதனால் சிங்கள மக்களுக்குப் பதிப்புகள் இல்லையெனவும் ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மாகாண சபைகளைக் கைவிடக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் மைத்திரி, ரணில், மகிந்த, சந்திரிகா உட்பட சிங்கள அரசியல் கட்சிகளின் பிரதான தலைவர்கள் அதற்கு உட்பட்டுள்ளனரென்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவே மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாகவும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.