அதுவும் ஒன்பது கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்வதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். இந்தப் பிரதேச மக்களின் போக்குவரத்துத் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு கடந்த மாசி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஒழுங்கு செய்யப்பட்ட போக்குவரத்துக்கள் சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதி மக்கள் மீண்டும் போக்குவரத்துப் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகக் கூறுகின்றனர்.
மைத்திரியின் உத்தரவை அடுத்து ஒழங்கு செய்யப்பட்ட போக்குவரத்துக்கள் திடீரென நிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் எதுவுமே தெரியவில்லை என்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு - அம்பாள்புரம் ஆறாம் கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அதிகாரிகள் எவரும் பார்வையிடுவதில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
போரின் போது இடம்பெயர்ந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டாலும் அவர்களுக்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இலங்கைப் படையினர் சென்று வரக்கூடியவாறு பிரதான வீதிகள் அகலமாக்கப்பட்டு தரைவிரிப்பு தார் போடப்பட்டுள்ளது. ஆனால் உட்புறக் கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள் செப்பனிடப்படவில்லை. அந்தக் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் இல்லையென சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.