நுவரேலியா, கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய அரசியல் கூட்டணியில் யார் தலைவர், யார் பொதுச் செயலாளர் என்ற பேச்சு்க்கு இடமேயில்லையென முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை அரசியலின் எதிர்காலத் தேவை கருதி பிரதேச வேபாடுகள் இன்றி புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் பல கட்சிகள் இணைந்தவுடன் அரசியல் செயற்பாடுகள் பற்றி அறிவிக்கப்படுமெனவும் ஆறுமுகன் தொண்டமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் புதிய அரசியல் கூட்டணியில் கட்சிகள் இணைக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் சன் குகவரதன் தலைமையிலான தமிழர் ஐக்கிய இணையமும் இணைந்து செயற்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை, புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை பேசப்படவில்லையென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய கூட்டணியில் இணைந்து செயற்படுமாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.