ஏலவே போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களில் பெரும்பாலானோர் தற்காலிக கொட்டகைகளில் வாழ்கின்றனர். இவர்களிற்கு ஏழு லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான வீட்டுத்திட்டம், கொழும்பில் உள்ள இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியோடு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது
இவர்களில் வீட்டுத்திட்ட பயனாளிகளாக 79 பேர் தெரிவானதாக கிளிநொச்சி செயலகத்தினால் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 157 குடும்பங்களில் 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் உள்ளன. இதனால் அவர்களைத் தவிர்த்து ஏனைய குடும்பங்களிற்கு குறித்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்களில் தனிநபர், அரச ஊழியர் எனக் காரணம் காட்டப்பட்டு 79 பேர் மாத்திரமே குறித்த பயனாளி பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக கிராம மட்ட அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அதிக வெப்ப காலங்களில் வாழ்ந்து வருவதாகவும், தமக்கென நிரந்தர வீடொன்றை அமைத்து வாழ்வதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் பின்னிற்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டுத்திட்டப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது வெறுமனே காகிதத்தில் மாத்திரமே உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டும் மக்கள், இலங்கை அரசாங்கம், தம்மீது அக்கறையின்றி செயற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எட்டு மாதங்கள் சென்று விட்ட நிலையிலும் இதுவரையும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் மக்கள் தொிவிக்கின்றனர்.