முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளும், கொழும்பில் இருந்து கிடைத்த உத்தரவு என்ற அச்சத்தினால் அமைதியாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமது காணிகளை மீளவும் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில். அந்தக் காணிகள் அனைத்தும் தமக்குரியவையென இலங்கை வன வளத் திணைக்களம் புதிய வரலாறு ஒன்றைக் கூறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோட்டக்கேணிப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்றும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் 2016 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் காணிகள் தமக்குரியவையென பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வன வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தப் பிரதேசங்களில் சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு யூலை மாதம் 19 ஆம் திகதி கொக்குத்தொடுவாயில் தமது பூர்வீக விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டபோதே மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். தமது விவசாயக் காணிகளை, இலங்கை மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்ளடக்கும் நோக்கிலேயே காணிகள் அளவீடு செய்யப்பட்டதாக மக்கள் அப்போது குற்றம் சுமத்தியிருந்தனர்.
கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து, மணல் இறக்கம் என்ற பகுதி வரையான காணிகள் அளவீடு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தார்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இலங்கைப் படையினரின் உதவியோடு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம். வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன், சிங்கள உயர் அதிகாரிகள் மூலமாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் காணிகளை அபகரிப்புச் செய்து வருகின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015இல் பதவியேற்ற பின்னரே காணி அபகரிப்புகள் இலங்கை ஒற்றையாட்;சி அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அமைவாக அபகரிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இலங்கை வன வளத் திணைக்களத்தி்ன் கொழும்பு நிர்வாகத்தின் கீழ் இந்தக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் தம்மால் எதுவுமே செய்ய முடியாதென முல்லைத்தீவுச் செயலக அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.