ஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அதற்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து தடுக்க முடியும்.
ஆனாலும் நாடாளுமன்றமே அதி உயர் அதிகாரம் கொண்டது என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீது விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விடமுடியுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், ஜனாதிபதி மீதான அரசியல் குற்றப் பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆகக் குறைந்தது 120 வாக்குகளை மாத்திரமே பெறமுடியும்.
அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 150 வாக்குகளைப் பெறுவதற்குத் மேலும் 30 வாக்குகளைப் பெறும் நோக்கில், ஜே.வி.பி மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.