தங்களுடைய ஆட்சியில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுமென கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம் எதையுமே செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திடம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் கையாண்ட இராஜதந்திரம் தோல்வி என்றும் அவர் கூறுகின்றார். இதனால் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏமாற்றிய விடயங்களை எடுத்துக் கூற வேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்க முடியாதென்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் இணைந்து கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் மனித உரிமை மீறல் போன்ற குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கைப் படைத் தளபதிகளைக் காப்பாற்றியது மைத்திரி - ரணில் அரசாங்கமே என்றும் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்.
அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் கூறுகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லையென சம்பந்தன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரிடம் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் மட்டக்களப்பில் மக்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.