கடந்த மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் குறித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள், கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தனர்.
ஆனால் ஐந்துபேர் கொண்ட நீதியரசர்கள் குழு தமது முடிவை ஏகமானதாக 29- 08- 2019 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக செயலாளர் உதய ஆர்; செனவிரட்ன இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
அமுலில் உள்ள புதிய முறையிலான மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரகாரமோ அல்லது முன்னர் அமுலில் இருந்த சட்டத்தின் படியோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்றும் இல்லையேல் இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியுமெனவும் இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே கூறியிருந்தார்.
அத்துடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த வேண்டுமென கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாதென்றும் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதே மைத்திரிபால சிறிசேனவின் திட்டமாக இருந்ததாக மகிந்த ராஜபக்சவை தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர் மகிந்தானந்த அழுத்தகமகே குற்றம் சுமத்தியிருந்தார்.
எல்லை மீள் நிர்ணயத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவொன்று, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தயாரித்த அறிக்கை, மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுவரை அதற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வருடம் ஓகஸ்ட் 28ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அக்குழு மேற்கொண்டிருந்த எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பான திருத்தங்கள் அறிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அறிக்கை முழுமையாகச் சமா்ப்பிக்கபடவில்லை.
இந்த நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமா இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன சட்ட வியாக்கியானம் கோரியிருந்தாா்.