சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தர தேசிய மக்கள் சக்தி முயற்சி எடுக்கும் என்றும் யாழ்ப்பபாணத்தில் அவர்கள் உறுதியளித்திருந்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துத் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க அதனை முற்றாகவே மறுத்தார். இலங்கை ஒற்றையாட்சி முறையில் மாற்றங்களைச் செய்ய முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி இயக்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது. அந்த இயக்கத்தை ஆதரிக்கின்ற பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறலாம்.
ஆனால் அந்தக் கருத்துக்கள் எதுவுமே ஜே.வி.பியின் கருத்தாக மாறிவிடாதென்றும் அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்குக்- கிழக்கு மாகாணங்களைப் பிரித்தது ஜே.வி.பியே.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணையின்போது இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டமை சட்டத்திற்கு மாறானதென்று நீதியரசர்கள் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தனர்.
எனவே அந்தத் தீர்ப்புக்கு மாறாக ஜே.வி.பி ஒருபோதும் செயற்படாதென்று கூறிய அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சகல அதிகாரங்களோடும் வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடெனவும் தெரிவித்தார்.
இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஒற்றையாட்சி முறையில் அதிகாரங்களைப் பங்கிட முடியாதென்றே அனுரகுமார திஸாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற புதிய அரசியல் யாப்புத் தொடர்பான விவாதத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.