மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த எழுத்து மூலமான உண்மைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியிலேயே சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறைக்கு இன்று அழைக்கப்பட்ட சவேந்ர பெர்ணான்டோவிடம் ஐந்து மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவின் விசேட உத்தரவுக்கு அமைவாக சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட பிரதான எதிரியாகவுள்ள நிலையில் அவரைப் பாதுகாக்கவே இலங்கை அரசாங்கம் முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பூகோள அரசியல் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஈழப் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் குறித்த விவகாரங்களில் குறிப்பிட்ட சில சம்பவங்களை மாத்திரம் விசாரித்து ஒருசில இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்துத் திசைதிருப்புகின்ற முயற்சியாகவும் இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
அல்லது அனைத்து இனப்படுகொலைகள் பற்றிய விசாரணைகளையும் மனித உரிமை மீறல் விவகாரங்களாக மாற்றி இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்குள் நின்று கொண்டு விசாரணை நடத்துகின்ற பொறி முறைகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையிலும் இவ்வாறான வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.