இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்
இந்திய- இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி
முந்நூறு இலங்கைக் கடற்படை பங்கேற்பு
பதிப்பு: 2019 செப். 14 18:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு:
செப். 15 03:38
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இந்தியா இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படையினர் இணைந்து அவ்வப்போது மேற்கொண்டு வரும் கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு ஏழாவது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது் (SLINEX 2019) என்ற பெயரிலான கூட்டுப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தில் கடந்த ஏழாம் திகதி ஆரம்பமாகி சென்ற வியாழக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையின் சிந்துரால, சுரனிமல ஆகிய போர்க் கப்பல்கள் பங்குபற்றியிருந்ததாக இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் முந்நூறு இலங்கைக் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் இணைந்து கொண்டதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2005 ஆம் ஆண்டில் இருந்து (SLINEX) என்ற பெயரிலான கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகின்றது. இந்திய இலங்கைக் கடற்படையினர் கொள்கையளவிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் SLINEX என்ற பெயரிலான கூட்டுப் பயிற்சி முக்கியமானது.
அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கியத்துவம் மிக்க நாடாக மாறி வரும் சூழலில் இந்தியக் கடற்படையோடு இணைந்து இலங்கைக் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.