இந்த நிலையிலேயே சென்ற பத்தொன்பதாம் திகதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஓப் த ப்லீட் (Admiral of the fleet) என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தரமுயர்த்தப்பட்டார். பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்திருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்காவுக்கு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கிடைத்த உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் வசந்த கரன்னாகொட இருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே விசாரணை நடத்துமாறு கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறியிருந்தனர்.
குறிப்பாகக் கடத்திக் கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கரன்னகொடவுக்கு தெரிந்திருந்ததாகவும் அது தொடர்பான ஆதரங்களை மறைத்துள்ளதாகவும் இலங்கைச் சட்டமா அதிபர் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணி சனத் விஜயவர்த்தனவினால் அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றார்.