இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றப் பிரதான நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு பரிசீலனை செய்யப்பட்ட போது, பிரதிவாதிகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் ஆர்.எம்.ரத்நாயக்க, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன ஆகியோருக்கு நாளை புதன்கிழமை இரண்டாம் ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்க உத்தவிட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய கடவுச் சீட்டு, அடையாள அட்டை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாமலேயே கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் கடவுச் சீட்டு, இலங்கைத் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற்றிருந்ததாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனடிப்படையிலேயே குறித்த உயர் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்சவுக்கு மேலதிகமாக பெயரிடப்பட்டுள்ள அவரது சகோதரரான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவரின் கீழ் பணியாற்றும் இளநிலைச் சட்டத்தரணிகளான நவீன் மாரப்பன, கணேஷ் தர்மவர்தன உள்ளடங்கிய குழுவினரும், அமைச்சர் வஜிர அபேவர்தன , ஏனைய அரச ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளேயும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி ஆகியோருடன் சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, ஹரித் டி மெல் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலுடன் முன்னிலையாகியிருந்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதியரசர்கள் முன்னிலையில் கூறினார். இந்த வழக்கு அடிப்படையில் ஆதாரமற்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். கோட்டாயப ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவரெனவும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை முன்வைத்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் பொய்யான காரணங்களின் அடிப்படையில் இலங்கைப் பிரஜாவுரிமையின்றி இலங்கைக் கடவுச் சீட்டு. தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றமை தேசத் துரோகம் என்றும் மனுதாரர்கள் கூறியிரு்ந்தனர்.
இரண்டு தரப்பு விவாதங்களையும் பரிசீலித்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றப் பிரதான நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனுவில கூறப்பட்டுள்ள விடயங்கள், அரசியல் ரீதியான காரணிகள் என்பதால் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிப்பதாக அறிவித்தார்.
நீதியரசர் மஹிந்த சமயவர்தன உட்பட மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை புதன்கிழமை முதல் இந்த மனு மீதான விசாரணை பரிசீலனைக்கு எடுக்கவுள்ளதாக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச மீதான இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணை தொடர்பாகவும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார்.
மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்துக் கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற மகேஸ் சேனநாயக்காவும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் போட்டியிட இதுவரை 17 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் கூறியுள்ளது.