அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த யாழ்ப்பாணம் செயலகத்துக்கு சமீபமாக நிமல்ராஜனின் வீட்டில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நிமலராஜனின் பெற்றோரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்தனர். வீடும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது.ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரவுவேளையில் நிமல்ராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இன்று வரை உரிய விசாரணைகள் நடத்தப்படாதவொரு சூழலில் 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பெருமளவு ஊடகவியலாளர்கள். நண்பர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியருகே நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டு வணக்க நிகழ்வுகளில் பங்குபற்றினர்.