இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லிக்குச் செல்லவுள்ளார். இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகவும் அமையவுள்ளது. கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதே நோக்கம் எனவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த மைத்திபால சிறிசேனவும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக புதுடில்லி சென்றிருந்தார்.
மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேயே எட்கா எனப்படும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றை இந்தியா இலங்கையோடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
ஜே.வி.பியும் எதிர்திருந்தது. பௌத்த குருமாரும் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். இதனால் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான அனைத்து வேலைத் திட்டங்களும் பூர்த்தியடைந்திருந்தாக இந்தியத் தூதரகம் அப்போது கூறியிருந்தது.
இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லிக்குச் செல்கிறார். தாமதமடைந்துள்ள எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பேசலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தி்ற்கு மேலதிகமாக 13 பிளஸ் வழங்கப்பட வேண்டுமென அப்போது இந்திய மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தியும் இருந்தது.
ஆனால் பொருளாதார, இராணுவ ரீதியிலான எந்தவொரு ஒப்பந்தமும் வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்படமாட்டாதென்று கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறியிருந்தார். அத்துடன் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு பற்றி எதுவுமே கூறவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.