நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவை தமிழ் இன அழிப்பாளர் என விமர்சித்துச் செய்தி வெளியிட்ட சர்வதேச செய்தி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று வியாழக்கிழமை கொழும்பு-07 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரைத் தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவரெனக் கூறியதாக ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்
இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சுரகிமு ஸ்ரீலங்கா, சிங்களே அப்பி ஆகிய அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்குக் கடிதம் ஒன்றையும் பிரித்தானியத் தூதுவர் மூலமாக அனுப்பியுள்ளது. இலங்கை இராணுவத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கோட்டாபய ராஜபக்ச மீது பிரித்தானிய ஊடகம் ஒன்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாகவும் தமிழ் இன அழிப்பில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பௌத்த குருமாரும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணிநேரமாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.