சென்ற 16 ஆம் திகதி இரவில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தல் வந்ததாகவும் இதனால் அவசர அவசரமாக அவர் இலங்கையைவிட்டு வெளியேறியதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
விசாரணைகள் தொடர்பாக மேற்பார்வை செய்த தனது மேலதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட செயலாளராக இடம்மாற்றப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக அழுத்தங்கள் வந்ததாகவும் இதனால் இலங்கையைவிட்டு வெளியேறி சுவிஸ்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாகவும் நிசாந்த டி சில்வாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.50க்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிஸ்லாந்துக்குச் சென்றுள்ளார். இவரது பயணம் குறித்து இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாதென்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிசாந்த டி சில்வா நடத்தி வந்தார்.
இலங்கைக் கடற்படையின் முன்னாள் தனபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுமிருந்தனர். வசந்த கரண்ணாகொட இந்த வழக்கில் பிரதான எதிரியாகவும் இனம் காணப்பட்டிருந்தார்.
அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு விசாரணைகளையும் நிசாந்த டி சில்வா மேற்கொண்டிருந்தார்.
நிசாந்த டி சில்வா சுவிஸ்லாந்துக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரவுள்ளமை தொடர்பாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்கவோ ஐக்கிய தேசியக் கட்சியோ கருத்துக் கூற விரும்பவில்லை.
மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேயே நிசாந்த டி சில்வா குறித்த பதவியை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது