கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் முதல் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க, இந்திய, சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பிராந்திய அரசியல் நிலைமைகள் குறித்துப் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று சந்தித்து உரையாடிய பிரித்தானியத் தூதுவர், வடக்குக் கிழக்கு நிலைமைகள் குறித்தும் உரையாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்ற விபரங்கள் எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.
இதேவேளை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக் குழுவினர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.