அருட்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அடிகளாரோடு சேர்த்துக் கொல்லப்பட்ட பொது மக்களுக்காகவும் பொது வழிபாடு இடம்பெற்றது.
இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. ஆயர் இம்மானுவெல் பெர்ணாண்டோ மற்றும் அருட் தந்தையர்கள் மரக்கன்றுகளை நாட்டினர்.
மன்னார் தள்ளாடிப் பிரதேசத்தில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணிச் செயலாளராகச் சேவையாற்றியிருந்த அருட்தந்தைமேரி பஸ்டியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த சிறுவர்கள், பொது மக்கள் பத்துப் பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இலங்கைப் படையினரால் 1984, 85 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் பற்றிய தகவல்களை வெளியுலகத்துக்கு அருட் தந்தை மேரி பஸ்த்தியன் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனாலேயே ஆனாள் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது அருட் தந்தை மேரி பஸ்த்தியனையும் அவருடன் கூட இருந்த பொதுமக்கள், சிறுவர்களையும் இலங்கை இராணுவத்தினர் கொலை செய்திருந்தனர்.
அருட் தந்தை மேரி பஸ்தியன் 1948 நவம்பர் 11ல் யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்தார். 1975ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் * மானிப்பாய், முருங்கன், மடு, வங்காலை ஆகிய பங்குகளில் உள்ள கோவில்களில் பங்குத் தந்தையாகப் பணியாற்றியிருந்தார்.
1981ல் மன்னார் மறைமாவட்டம் யாழ் மறை மாவட்டத்தில் இருந்து தனி மறை மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் மன்னாரில் பணியாற்ற வேண்டுமென யாழ் ஆயர் தியோகுப்பிள்ளையிடம் கேட்டிருந்தார். அதனால் * மன்னார் மறைமாவட்டத்தின் இளையோர் ஆணைக்குழுவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1983 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சிங்கள- தமிழ் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுக் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து மன்னாரில் குடியேறிய தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருந்தார் அருட் தந்தை மேரி பஸ்த்தியன்.