தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனக் கோரி இந்த ஆண்டு இறுதிக்குள் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்கு தமிழ் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் இன்று வரை தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது.
அத்துடன் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்க பின்வரும் தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
1) வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
2) தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
3) தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது
இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையையும் கோரி நிக்கிற தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தின்பால் தாம் கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக் கொண்டு வருவதற்கும் வலியுறுத்தும் நோக்கிலும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும்.
மூத்த விரிவுரையாளர் சிதம்பரநாதனின் வழிகாட்டலிலும் பயிற்சியிலும் இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக மக்கள் கருத்தறிந்து மக்கள் மயப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் 2000 ஆம் ஆண்டில் அன்றைய மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.