30/1 தீர்மானத்தின் மூலமே மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் காப்பாற்றியதாகவும் சர்வதேச விசாரணை, தமிழ் இனப் படுகொலை என்ற விடயங்கள் தடுக்கப்பட்டதாகவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சென்ற வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இது தொடர்பாகவும் அரசாங்கம் பரிசீலித்து வருவதுடன் உள்ளக விசாரணைகளைக் கூட தடுப்பதற்குரிய ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் உரையாற்றுவதற்காக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவுக்கச் செல்லவுள்ளார்.
அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அனேகமாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உரையாற்றும்போது 30/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறுவது குறித்து நேரடியாகக் கூறமாட்டார் என்றும் மாற்று வழிகள் தொடர்பான சில பரிந்துரைகளை அவர் முன்வைக்கலாமெனவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக 30/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதைவிட அந்ததத் தீர்மானத்தில் முக்கியமான பகுதிகளை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் உள்ளக விசாரணைகளும் அவசியம் இல்லையென்றும் இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது குறைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுவாரெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவுமே ஊடகங்களுக்குக் கூறவில்லை.