நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
கொரோனா வைரஸ் இலங்கைத் தீவில் வேகமாகப் பரவி வரும் நிலையில் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் செய்யப்படுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்குவதற்கு உரிய ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பல சிரமங்களின் மத்தியில் இலங்கைச் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் கொரேனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அதேவேளை, யாழ் அனலைதீவுப் பிரதேசத்தில் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறினார்.
அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் புதன்கிழமை முதல் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.