நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்பாகவும் அதனைச் சுழவுள்ள காவல் அரன்களில் இருந்து பொலிஸாரை அகற்றிவிட்டு இராணுவத்தைக் காவல் கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட நிலையில் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
ஆனால் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட்டுத் தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த கோட்டாபய ராஜபக்ச முற்படுகிறார் என்று குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகள்,
மக்களுடைய நலன்களைக் கருதாது அரசியல் லாபம் தேட முற்படுவதாகவும் அனைத்து அரசியல் கட்சிளினதும் கோரிக்கைகளைப் புறக்கணித்துத் தேர்தலை நடத்த முடியாதென்றும் கூறியுள்ள எதிர்க்கட்சிகள், பலாத்காரமாக நாடாளுமன்றத்தைக் கூட்ட முற்படுவதாகக் கூறப்படுகின்றது.இதனாலேயே நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியைச் சுற்றி இராணுவத்தைக் காவல் கடமையில் ஈடுபடுத்த முற்படுவதாகவும் இன்று நள்ளிரவு அல்லது நாளை முதல் இராணுவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புப் பொறுப்பைக் கையேற்கலாமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.