மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் மூலமாகத் தடை விதித்திருந்த நிலையில், வடக்குக் கிழக்குத் தாயகத் தமிழர்கள் தமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நினைவேந்தலை நடத்தியிருந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்ல இராணுவம் முழுமையாகத் தடை விதித்திருந்தது. இதனால் தமது வீடுகளில் விளக்கேற்றி, போரில் உயிரிழந்த மாவீரர்களையும் தமது உறவினர்களையும் தமிழர்கள் நினைவு கூர்ந்தனர்.
இதேவேளை, மன்னார் பிரதேசத்தில் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது மாலை 6.05 க்கு தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தலை நடத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் நினைவேந்தல் இடம் பெற்றது.
எனினும், திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மையான இடங்களில் மாவீரருக்கான நினைவு அஞ்சலி நிகழ்வுகள் அரிதாகவே காணப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரே தமது வீடுகளில் தீபமேற்றினர்.
நேற்று வியாழக்கிழமை முதல் திருகோணமலை ஆலய வளாகங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் மக்கள் அச்சமடைந்து ஆலயங்களுக்குச் செல்லவில்லை.