இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சி நிரலில்

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்

முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென நிசாம் காரியப்பர், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை
பதிப்பு: 2021 ஜன. 10 15:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 19:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வாசலில் கூடாரம் அமைத்துச் சுழற்சி முறையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்ட நினைவுத் தூபி மீளவும் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது. நாளை திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் முழுமையான கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த அழைப்புக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
 
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு முஸ்லிம் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷரட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களைத் தொடர்ச்சியாக ஒடுக்கி வருவதாகவும் அடக்கு முறைக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்ப் பரவலினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை (சடலங்களை) இந்த அரசாங்கம் பலாத்காரமாக எரியூட்டுவதாகவும் அதேபோன்றுதான் முள்ளிவாய்கால் நினைவுத் தூபியும் இடிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை முஸ்லிம் மக்கள் கூட்டாகக் கண்டிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீ்ன் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்குத் தனது கண்டனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை சென்ற 8 ஆம் திகதி இரவோடிரவாக இடித்து அழித்துள்ளதாகத் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழப் போரில் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவது தமிழ் மக்களின் கூட்டுரிமை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு

முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் சிங்கள அரசியல் சொல்லாடலை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்று கூறி தமிழினப் படுகொலையை மறுத்து வந்துள்ளது.

இன்று பதினொரு வருடங்கள் முடிந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்றுவதென்பது அரசின் ஒத்த அரசியல் சொல்லாடலை தக்க வைப்பதோடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்வதுமாகும்.

தமிழினப்படுகொலைச் சொல்லாடலை அரசு மிகத்திட்டமிட்டு தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் அகற்றி வருவது என்பது சிங்கள - பௌத்த அரசின் தூர நோக்குக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். தமிழினப் படுகொலையில் இறந்த மக்களை நினைவு கூருவது தமிழ் மக்களின் கூட்டுரிமை சார்ந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்கு சிங்கள - பௌத்த அரசு வருடாவருடம் முயன்று வந்தது தமிழினம் அறிந்த வரலாறு.

தமிழினப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு அரசியல் வெளியை நிராகரித்து, சிங்கள அரசு நல்லிணக்கத்தை, சமாதானத்தை முன்னெடுப்பது அபத்தமும், முரண்பாட்டுத் தன்மை கொண்டதுமாகும். பதினொரு வருடங்கள் கழிந்த நிலையிலும் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு தயாரற்ற நிலையில் உள்ள அரசின் நிலைப்பாடு, சிறிலங்கா சிங்கள - பௌத்தர்களுக்கானது என்ற பேரினவாத அடிப்படைவாத மகாவம்ச மனநிலையில் முதலீடு செய்கின்றதோடல்லாமல் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை தமிழ்த் தேசிய நீக்கம் செய்கின்றது.

தமிழினத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கெதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிறுவனமாக இருந்து வந்துள்ளதென்பது, கல்விக்கும் யதார்த்தத்திற்குமிடையேயுள்ள உறவை புரிந்து வந்துள்ள பண்பாட்டை யாழ்.பல்கலைக்கழகம் பாரம்பரியமாகக் கொண்டது.

தமிழின ஆக்கிரமிப்பிற்கெதிரான, தமிழின விடுதலை சார்ந்து சிந்திக்கின்ற பாரம்பரியத்தைத் தாயகத்தில் தக்க வைத்தக் கொள்கின்ற நிறுவனமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் விளங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தை தமிழ்த் தேசிய நீக்கம் செய்கின்ற நடவடிக்கைகளை சிங்கள – பௌத்த அரசு செய்து வருவதென்பது தெரியாத விடயமுமல்ல.

ஆனால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பென்பது வன்மையாகக் கண்டிக்கப்படுவதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொண்டிருக்கின்ற தமிழின விடுதலை சார்ந்த பண்புகளை தமிழ்த் தேசிய அடையாள நீக்கம் செய்வதாகும்.

இச் சூழமைவில் தான் முன்னாள் துணைவேந்தரின் பதவி நீக்கமும், கலாநிதி.குருபரன் (சட்டத்துறை மேலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) மீது பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தையும் உற்று நோக்க வேண்டியிருக்கும். மிக அண்மையில், தற்போதைய பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வட மாகாண ஆளுநர் கலாநிதி.சுரேன் ராகவன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.

கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் முன் கொணரப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் சட்டவரைபு மூலம் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும். அது முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததை முக்கியத்துவம் அற்றது அல்ல என நிராகரித்து விட முடியாது.

சிங்கள - பௌத்த ஏகாதிபத்திய அரசு தமிழினத்தை அடக்குமுறைக்குள்ளாக்குவதற்கு கல்வி நிறுவனங்களையும், தனக்குட்பட்ட ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துகின்றது- அரசு, இயந்திர நிகழ்ச்சி நிரல்களிலிருந்து அதற்கான நியமனங்கள் வரை- என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டுவிட்டது.

வெவ்வேறு அரச திணைக்களங்களுக்கூடாக, தொல்லியல், வனவளத்துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழ் நிலங்களையும் தமிழ் மரபுரிமைச் சின்னங்களையும் இல்லாதொழிப்பது அல்லது திரிவுபடுத்துவது என்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலை, ஆயுதமற்ற போராக வடக்கு– கிழக்கில் ஒட்டுமொத்த தமிழினம் மீது சிங்கள - பௌத்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

2009க்குப் பின்னர் ஆயுதமற்ற போரை வடக்கு, கிழக்கில் கட்டவிழ்த்த சிங்கள - பௌத்த அரசு தொடர்ந்தும் தமிழினத்தை அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டு சிங்கள - பௌத்த ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தி தமிழினத்தின் கூட்டுரிமைகளை ஈழத்தமிழ் அடையாளம் சார்ந்து மறுத்து, நிராகரித்து, மீறி வருவதென்பது சிங்கள - பௌத்த அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து மாறவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

ஒட்டுமொத்த தமிழினமும் கூட்டாக சிங்கள - பௌத்த அடக்குமுறைக்கெதிராக எழுச்சி கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றது. அவ் வரலாற்றுக் கடமை எம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.