குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வது குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் ரெலோ இயக்கம் அழைக்கப்படவில்லை.
தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக ரெலோ இயக்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
அதேவேளை, சிவில் சமூக அமைப்புகளோடு இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ரெலோ இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மனித உரிமைச் சபையின் ஆணையாளர், மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைபில், ரெலோ இயக்கம் கையொப்பமிட அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அல்லது குறித்த கட்சிகளினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் கையொப்பமிட்டால் போதுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த வரைபில், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ரெலோ இயக்கத்துக்குக் குறித்த வரைபில் கையொப்பமிட அனுமதிக்கப்பட வேண்டுமெனச் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசனையின் பிரகாரம் மேற்படி குறித்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டால் போதுமெனச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியதாகவும் ஆனால் ரெலோ இயக்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ரெலோ இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்த ரெலோ இயக்கம், மூன்று நாடாளுமன்ற உறுப்பிர்களைப் பெற்றிருந்தது.