கொட்டும் மழைக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரின் அடக்கு முறைகள் அச்சுறுத்தல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகளுக்கு மத்தியிலும் இந்த நடைபவனிப் போராட்டம் இடம்பெற்றது.
சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறுவதோடு இந்தப் போராட்டத்திற்கு சகல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மக்களின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தியே இந்த நடைபவனிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டனர். தமிழ்ச் சகோதரர்களின் இந்த அறவழிப் போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதேவேளை பொத்துவில் பிரதேசம் முழுவதிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இராணுவ வலயமாக பொத்துவில் நகர் மாற்றப்பட்டுள்ளது. பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம்பெற்றன.
கிழக்கு மாகாணத்தின் வேறு சில பகுதிகளில் திடீர் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சோதனைச்சாவடியைக் கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம் பெறுகின்றன.
ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைக்குப் பயப்படமாட்டோமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 நோய்ப் பரவல் தடுப்புச் சட்டங்களைக் காரணம் கூறி, பொலிஸார் போராட்டத்தைத் தடுக்க முற்பட்டதாகவும் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவே போராட்டம் இடம்பெறுவதாகவும் சாணக்கியன் கூறினார்.