தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவில் கொரோனா நோயாளர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டாம் திகதி தீர்மானம் மேற்கொண்டு அது தொடர் பான வர்த்தமானி அறிவித்தலையும் சுற்றுநிரூபமொன்றினையும் சுகாதார அமைச்சின் ஊடாக வெளியிட்ட நிலையில் கடந்த மூன்றாம் திகதி தொடக்கம் இரணைதீவு மக்கள் தமது எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று ஆறாவது நாளாகவும் இரணைதீவு மக்கள் தமது போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக முழங்காவில் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
ஞாயிறு காலை இரணைதீவு புனித செபமாலை மாதா ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த போராட்டத்தில் இலங்கையின் நாலாபுறமும் வாழும் இரணைதீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும் பங்கு தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
போராட்டத்தை நடத்தி வரும் இரணைதீவு மக்களைச் சந்திப்பதற்காக நாளை கடற்றொழில் அமைச்சர் இரணைதீவு வருகை தரவுள்ள நிலையில் இரணைதீவு மக்கள் தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நற்செய்தியை அமைச்சர் எடுத்து வரலாம் எனும் நம்பிக்கையுடன் அமைச்சர் டக்ளஸ்சின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இரணைதீவில் சடலங்களைப் புதைப்பதற்கு குழிகள் தோண்டப்பட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக பாதுகாப்புப் பணிகளுக்காக முழங்காவிலில் இருந்து பொலிஸார் இரணைதீவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.