ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்தும் பலர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னான்டோ தெரிவித்தார்.
ஆயர் இராயப்பு ஜோசப் யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழன் காலை மரணமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை முற்பகல் வரை யாழ் நகரில் அன்னாரின் புகழ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வாகனப் பவனியாக வெள்ளிக்கிழமை மாலை 3.45க்கு மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு பொது மக்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறை மாவட்ட வரலாற்றிலேயே ஆயர் ஒருவர் மரணித்தது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் ஆயர் ஒருவர் மரணமடைந்தால் அவரின் புகழுடல் ஆயர் இல்லத்திற்குரிய பேராலயத்தில் ஏலவே வடிவமைக்கப்பட்டுச் செப்பனிடப்பட்டிருக்கும் புதைகுழியில் நல்லடக்கம் செய்யப்படுவது வழமை.
இந்த நிகழ்விற்கு பேராயர் கர்தினால், அதி மேதகு மல்கம் ரஞ்ஜித், யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப், திருமலை ஆயர் நோயல் இமானுவேல், பதுளை மறை மாவட்ட ஆயர் ஜே. வின்ஸ்டன் பெர்னாந்து, சிலாபம் மறை மாவட்ட ஆயர் மேதகு வலன்ஸ் மென்டிஸ், குருநாகல் மறை மாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி பெரேரா, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க உட்பட அனுராதபுரம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மறை மாவட்டங்களின் ஆயர்கள் கலந்து கொண்டு கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
அருட் தந்தையர்கள் அருட் சகோதரரிகள் மற்றும் அருட் சகோதர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.