இலங்கையின் தென் மாகாணம் காலி மாவட்டம் டலல்ல எனும் கிராமத்தைச் சேர்ந்த இலங்கை விமானப்படைச் சிப்பாயான றோசன் அபேயசுந்தர கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் தலைமன்னார் கரையிலிருந்து இந்தியா தனுஷ்கோடியை நோக்கித் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
பின்னர் இந்தியா தனுஷ்கோடியில் இருந்து மீண்டும் இலங்கை நோக்கி தனது நீச்சல் பயணத்தை தொடர்ந்த இவர் இன்று ஞாயிறு அதிகாலை 3.30 க்கு தலைமன்னார் கரையை வந்தடைந்ததாகத் தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
குறித்த இலங்கை விமானப்படை வீரர் கடந்த மார்ச் மாதம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும் பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் நீந்தி உலக சாதனையை நிலைநாட்ட தயாரானார். எனினும் காலநிலை காரணமாக தலைமன்னார் கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டதினால் அன்றைய தினம் தனது நீச்சல் பயணத்தைக் கைவிட்டு அவர் கொழும்பு திரும்பினார்.
இந்தநிலையில் குறித்த விமானப்படைச் சி்ப்பாய் தனது முயற்சியை மீண்டும் ஆரம்பித்து அதில் வெற்றியடைந்துள்ளார். இவ்வகையில் 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 48 செக்கன்களில் இவர் 59.3 கிலோமீற்றர் தூரத்தை நீச்சல் மூலம் கடந்து உலக நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனையை முறியடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.