சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவும் ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்படவில்லை. ஆனாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறிய கட்சிகளும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஏலவே முரண்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பாகச் செய்திகள் வெளியானதும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
பௌத்த குருமார் சிலரும் சந்திப்பை ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியை நாளை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று மாலை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இன்றுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவில்லை. அரசியல் தீர்வுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும், அனைத்துக் கட்சித் தலைவர்களோடும் உரையாடி இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதே தனது நோக்கமெனவும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.