இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடுத்த

ஜனாதிபதி வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்சவே- கட்சி அறிவிப்பு

பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக நாளை பதவியேற்பு
பதிப்பு: 2021 ஜூலை 07 20:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 07 22:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ச போட்டியிடுவாரெனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது தடவையும் போட்டியிடுவாரென கட்சி இன்று புதன் கிழமை அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோகித்த அபே குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தனிப்பட்ட தனது கருத்தல்ல என்றும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஒட்டுமொத்த விருப்பம் எனவும் ரோகித அபே குணவர்த்தன தெரிவித்தார்.
 
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் இரு முறை போட்டியிடலாம் என்ற அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய ராஜபக்சவே போட்டியிடுவாரென அவர் கூறினார்.

பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கவுள்ளமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதன் பிரதிபலிப்பாகவே கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற அறிவிப்பும் வெளி வந்ததாகக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை, பசில் ராஜபக்ச நாளை வியாழக் கிழமை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார். அதையடுத்து அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பசில் ராஜபக்வின் பெயரை இலங்கை வர்த்தமானியில் இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ளது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகிப் பசில் ராஜபக்சவுக்கு இடமளித்தமை குறிப்பிடத்தக்கது.