மன்னார் மாவட்டத்தில் மடு, முருங்கன், முசலி மற்றும் நானாட்டான் பிரதேசங்களின் மாவட்ட வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கடந்த செவ்வாய் தொடக்கம் குறித்த சினோஃபார்ம் தடுப்பு ஊசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் அரசாங்க அதிபர் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அபாயம் உடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பகுதியில் உள்ள ஐந்து கிராமசேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திற்கு சுமார் 20000 பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக வெள்ளிக்கிழமை தலைமன்னார் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குறித்த பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சனிக்கிழமை 10 ஆம் திகதி தொடக்கம் வங்காலை பேசாலை, சிலாவத்துறை மற்றும் அரிப்பு ஆகிய கரையோரப் பகுதிகளிலும் பைசர் கொரொனா தடுப்பு ஊசிகளைப் பொதுமக்களுக்கு ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேலும் தெரிவித்தார்
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் முதல் சுற்றுக்குத் தேவையான கொவிட் தடுப்பு ஊசிகளைக் கொழும்பில் இருந்து விரைவில் தருவிப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் மன்னார் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.