மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரைச் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இந்த குழுவை நியமித்துள்ளார்.
இந்தக் குழு பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பாகவும் மற்றும் பிரத்தியேகத் தகவல்கள் பற்றியும் சட்டமா அதிபருக்கு அறிவிக்கும். டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பணிப்பெண்ணாகக் கடமையாற்றியுள்ளர்.
சென்ற 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமி உள்ளாகியிருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி சட்டத்தரணி ஊடாகப் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை மாலை முன்னிலையாகியுள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.