இலங்கைத்தீவில்

மின்சார அபிவிருத்தி- அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மின்சாரசபை சேவையாளர் சங்கம் போர்க்கொடி- நிறுவனத்தின் பணிப்பாளர் கொழும்பில்
பதிப்பு: 2021 ஒக். 12 22:55
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய அரசாங்கம் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் கைச்சாத்திடத் தீர்மானத்துள்ளதாக மின்சாரசபை சேவையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மின்சார சபை விரிவாக்கத் திட்டத்தில் பாதிப்பு எதுவுமே ஏற்படாதெனக் குறிப்பிடும் அரசாங்கம் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு வரைபையும் இதுவரை வெளிப்படுத்தவில்லையென மின்சாரசபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனப் பணிப்பாளர் கொழும்புக்கு வந்துள்ளாரெனவும் கூறினார்.

இந்த அரசாங்கம் அமெரிக்க நிறுவனங்களோடு இரகசியத் திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பாக மின்சார அபிவிருத்தித் திட்டங்கள் அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்றும் மின்சாரசபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் கூறினார்.

ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து எதுவுமே கூறவில்லை.

இதேவேளை, கொழும்பின் எல்லை மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய பிரதேசத்தின் ஒரு பகுதியை எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளவேளையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.