ஆனால் இலங்கை அரசாங்கத்தின் காணிச் சி;ர்திருத்தக்குழுவுக்குச் சொந்தமான காணியென உரிமை கோரப்பட்டு வெளியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஹற்றன் சமனலகம பிரதேசத்தைச் சேர்ந்த, 25 குடும்பங்கள் வீடமைத்து வாழ்வதற்காகத் தலா ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் வீதம் ஏலவே பிரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியாருக்கு அந்தக் காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ஹற்றன் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பெருமளவு மக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஆர்ப்பாட்டத்தை தடுக்க முடியவில்லையென நோவூட்டில் உள்ள இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிளங்கன் தோட்டத்திற்கு அருகில் இந்தக் காணி காணப்படுவதால், சமனலகம மக்களுக்கும், கிளங்கன் தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் 120 குடும்பங்களுக்கும் பகிர்ந்து விட்டு, எஞ்சியிருக்கும் காணிகளை, கிராம சேவக பிரிவுக்குட்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் க. குழந்தைவேல் ஆகியோர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தனர். மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பொதுக் காணிகளையும் இலங்கை அரசாங்கம் வெளியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதால் தமது விகிதாசாரம் குறைவடையும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மலையகத்தில் அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீதும் குற்றம் சுமத்தினர்.