ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுத்து நிறுத்தவா

கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் நியமனம்? கோட்டாபாயவை சாடுகிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

தகுதியைப் பற்றித் தன்னை நியமனம் செய்ய ஜனாதிபதியிடமே கேட்க வேண்டுமென்கிறார்
பதிப்பு: 2021 நவ. 11 22:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 01:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி தனக்கு இல்லை என நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என் தொலைக்காட்சிக்கு இன்று வியாழக்கிழமை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
 
கொழும்பு பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிப்பதற்குத் தனக்கு தகுதி இருக்கின்றதா இல்லையா என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிசீலித்திருக்க வேண்டும்.

ஆகவே வேந்தராகப் பதவி வகிப்பதற்குத் தனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி ஜனாதிபதியிடமே கேட்க வேண்டுமென முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார்.

வேந்தராக நியமனம் செய்வதற்கு முன்னர் தன்னுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் நியமனம் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தேரர் கூறினார்.

கோட்டாபயவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக உழைத்த தேரர் நாரஹேன்பிட்டி அபயராம விகாரை மண்டபத்தையும் அதற்காகப் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த நிலையில், அரசாங்கத்தைக் காரசாரமாக விமர்சித்த தேரர், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்புப் பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதவியேற்கப் போவதில்லையென தேரர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.