உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை குறித்த கருத்து வெளிப்பாடு

உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்த பின்னரும் அருட்தந்தை சிறில் காமினி மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலத்திற்கு ஏற்பாடு
பதிப்பு: 2021 நவ. 14 22:41
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 23:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பு பேராயர் இல்லத்தின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணைகைள அவதானிக்கும் குழுவின் தலைவர் அருட்தந்தை சிறில் காமினி நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றில் சென்ற 8 ஆம் திகதி பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அருட்தந்தை சிறில் காமினியை அழைத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு விளக்கமளிக்கும் இணையவழிச் செய்தியாளர் மாநாடு கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்றிருந்தது.
 
அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து அரசாங்கத்தை அவமதித்துள்ளதால் அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட்டிருந்தார். அதனையடுத்தே அருட்தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள் பிரகாரமும், தண்டனைச் சட்டக் கோவையின் அத்தியாயங்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாகக் கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு, அறிவித்திருந்தது.

மீண்டும் சென்ற நவம்பர் 3 ஆம் திகதி மு.ப. 9.30 க்கு வருகை தருமாறு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவித்தது.

இவ்வாறானதொரு நிலையில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறித் தனது சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் அருட் தந்தை சிறில் காமினி பதில் வழங்கியிருந்தார்.

இதனால் விசாரணைகளுக்கு செல்வதையும் அருட்தந்தை தவிர்த்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, உயர் நீதிமன்றுக்கு உறுதிப்பாட்டொன்றை வழங்கும் நோக்கில், அருட் தந்தை சிறில் காமினியை கைது செய்யும் தீர்மானம் இல்லையென அறிவித்தார்.

இலங்கைச் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியிலேயே தற்போது அருட் தந்தை சிறில் காமினி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.