ஓ.எம்.பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்ததாகக் கூறி அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்துக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தங்களுக்கு ஏனைய மிகுதித் தகவல்களையும் வழங்குமாறு கடிதங்கள் அனுப்பப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஓ.எம்.பி அலுவலகத்தில் இருந்து பதிவு செய்த உறவினர்கள் பலருக்குக் கடிதங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இந்தப் பதிவுகளின் அடிப்படையில் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்க இந்த அலுவலகம் முற்படுகின்றது. இழப்பீடுகளையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஆகவே இந்த அலுவலகத்தில் பதிவு செய்த உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மரியசுரேஷ் ஈஸ்வரி கேட்டுக் கொண்டார். இந்த அலுவலகத்தில் பலர் பதிவு செய்யவில்லை. பதிவு செய்த சிலரின் முறைப்பாடுகளை மையமாக் கொண்டு அவற்றை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆனால் இந்த அலுவலகத்தை நம்பவில்லை என்று தமது சங்கம் பல தடவை கூறியதாகவும் ஆனாலும் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதாகக் கூறித் தமது நோக்கத்தையடைய அவர்கள் முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பாக மரியசுரேஷ் ஈஸ்வரி மேலும் கூறுகையில்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படம் காணாமல் போனவருடைய அடையாள அட்டை, காணாமல் போனவருடைய பிறப்பு சான்றிதழ், உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர் இந்த தகவல்கள் அனைத்தையும் வழங்குவதற்கு நாங்கள் மடையர்கள் அல்ல.
உறுதியாகக் கூறுகிறோம் எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி சர்வதேச சமூகத்திடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நாங்கள் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது அவர்களை எங்களிடம் கையளியுங்கள் என்று நாங்கள் எங்கள் உயிர்களை தான் கோருகின்றோம் எங்கள் உயிர்களையும் தர விரும்பினால் யாரும் தொடர்பு கொள்ளலாம் அவ்வாறில்லையெனில் யாரும் எங்களது உறவுகளிடம் தொடர்புகொண்டு தகவல்களை பெற வேண்டாம் இலங்கையில் எமக்கான தீர்வு கிடைக்காது ஆகவே யாரும் எமது பதிவுகளை பெற முனைய வேண்டாம் என்றார் அவர்.