முன்னாள் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தனது வீட்டில் தீபம் ஏற்றி வணக்கம் செய்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை மற்றும் தீவகம் சாட்டிப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தீபம் ஏற்றி வணக்கம் செய்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு கடற்கரையிலே சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி மற்றும் பலரும் சுடர் ஏற்றுவதாக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை பொலிசார் கைது செய்துள்ளனர்
இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
ஏற்கனவே முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டபோதும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்
முல்லைத்தீவு கடற்கரையில் பொதுச்சுடரினை பீற்றர் இளஞ்செழியன் கிந்துஜா ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுக் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மன்னார் பொலிஸாரிடம் இளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வணக்க நிகழ்வுகள் மிகவும் குறைந்தளவில் இடம்பெற்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
கடந்த 21 ஆம் திகதி முதல் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.