இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் மேற்படி முகக்கவசங்கள் பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட வெற்றுக் கொள்கலன்கள், பாலித்தீன் பைகள் ஆகியன முல்லைத்தீவு கடற்பரப்பில், ஆங்காங்கே பெருமளவில் மிதக்கும் நிலையில் அவை மீன்பிடி வலைகளில் சிக்கிக்கொள்வதால் மீனவர்களின் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்துக்கும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அண்மைக்காலங்களாக முல்லைத்தீவு மீனவர்கள் மீன்கள் இன்றி பயன்படுத்திய முகக் கவசங்கள் மற்றும் ஏனைய பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களுடனேயே கரை திரும்புவதாக சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார்.
இலங்கையின் வட மாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைந்து இங்குள்ள மீன் வளத்தை அள்ளிச் செல்லும் அவலம் பல வருடங்கள் நிகழ்ந்து வருவதினால் வட மாகாணத்தின் மன்னார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வதியும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் பொருளாதார நிலையில் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் வட மாகாண கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்களின் வருகையை நிரந்தரமாக தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய மீனவர்கள் வட மாகாண கடற்பரப்பிற்கு வருகை தராத ஏனைய நாட்களில் மீன்பிடிக்கு செல்லும் முல்லைத்தீவு மீனவர்கள், மீண்டும் கரைதிரும்பும் போது மீன்களுக்கு பதிலாக பயன்படுத்திய முகக் கவசங்களையும் ஏனைய இந்திய மருத்துவக் கழிவுகளையும் எடுத்துவருவதாக மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.