மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட பிரதேசம் படுவான்கரையாகும். இப்பகுதியிலிருந்து நகர்பகுதிக்கு செல்வதாயின் செங்கலடி -பதுளை வீதி அல்லது கரடியனாறு வீதி பயன்படுத்தி மிக நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
ஆனால், எமது கிராமத்திலிருந்து மிகவும் அண்மித்ததாகவுள்ள உன்னிச்சை எட்டாம் ஆம் கட்டையை மிகவும் சொற்ப நேரத்தில் சென்றடைந்து தமது காரியங்களை நிறைவு செய்து கொள்ள முடியும்.
இரு பக்கமும் அடர்காட்டுப்பகுதினுடாக யானைத் தாக்கத்திற்கு மத்தியில் செல்லும் முரசு வீதியில் காலையில் 9.00 மணிக்கு பின்னரும் மாலை 3.00 மணி நேரத்திக்குள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
யானையின் அட்டகாசம் அதிகம் உள்ள இந்த வீதியைப் புனரமைப்புச் செய்வதன் மூலம் இப்பகுதி மக்கள் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்வர்.
மட்டக்ககளப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றபோதும் அவ்வாறான திட்டங்கள் எதுவும் படுவான்கரைப் பகுதிக்கு செய்யப்படுவதில்லை எனவும் வடிவேல் குற்றம் சுமத்தினார்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் அரசியல் வாதிகள், தேர்தல் முடிந்த பிற்பாடு பிரதேச அபிவிருத்திகள் பற்றி எதுவுமே சிந்திப்பதில்லை.
ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான மக்கள் பயணம் செய்யும் இந்த விதியை புனரமைப்புச் செய்து தரவேண்டும் என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.வடிவேல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
படுவான்கரைப் பிரதேசத்திற்கு வருவதற்கு காபெட் வீதி போடாவிட்டாலும், போக்குவரத்துக்கு உகந்தாக குன்றும் குழிகள் இல்லாது செய்து தருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியில் தெரிவித்தாலும். கிராமப் புறங்கள் யுத்தம் நடைபெற்ற காலங்களில் எவ்வாறு காட்சியளித்ததோ அவ்வாறே இன்றும் காணக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.