காங்கிரஸின் அனுமதியின் பின்னரே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் துாதரகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
இந்து சமூத்திர பாதுகாப்பு, மற்றும் அணர்த்த நிவாரண உதவிகள் ஆகியவை இந்த நிதி வழங்கும் திட்டத்தில் அமைந்துள்ளது எனவும் இலங்கை அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சு நடத்தப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக துாதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட பங்களாதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளோடு பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த விடயங்களில் அமெரிக்கா ஈடுபடுகின்றது.
அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விடயங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுவது சிறப்பான முதலீடு என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை கூறுவதாக கொழும்புத் துாதரகத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் சீன அரசுடனான உறவு நிலை மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், அமொிக்கா அந்த நாடுகளின் சமூத்திரப் பாதுகாப்பு என்ற திட்டத்தின் கீழ் பெருமளவு நிதியைச் வழங்கி வருவதாக ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூாிய தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில், அமெரிக்கக் கடற்படையின் விசேட பிரிவு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு நான்கு வாரங்கள் பயிற்சியளித்திருந்தது.
இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 62 பேருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு இறுதிப் போருக்கு உதவியளித்த அமெரிக்க, ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை கொடுக்காமல், வெறுமனே இலங்கை முப்படையின் வளர்ச்சிக்கு உதவியளித்து வருவதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன் குற்றம் சுமத்தியுள்ளார்.